உத்தரப் பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டதில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 26, 2014

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு சரக்கு வண்டி ஒன்றுடன் மோதியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.


கான்ட் கபீர் நகர் மாவட்டத்தில் சூரெப் தொடருந்து நிலையத்தில் கோராக்தம் விரைவு வண்டியின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் வண்டியினுள்ளே சிக்குண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.


அரியானா மாநிலத்தின் இசார் நகரை நோக்கி இவ்விரைவு வண்டி சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்தது.


இந்தியப் பிரதமராக இன்று பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோதி, இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாக டுவிட்டர் மூலம் செய்தி தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]