உருசியப் பிரதமர் பூட்டினைக் கொல்லத் திட்டமிட்ட இருவர் உக்ரைனில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 27, 2012

உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டினைக் கொலை செய்யும் திட்டம் ஒன்றை உக்ரைனியப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர் என உருசியச் செய்தி நிறுவனம் ரியா நோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனியத் துறைமுகமான ஒடேசாவில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டின்

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் காட்சி உருசியத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. பூட்டின் மீதான தாக்குதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் தேர்தலில் பூட்டின் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


கைது செய்யப்பட்டவரில் ஒருவர் இலியா பியான்சின் என்பவர், தான் பூட்டினைக் கொல்வதற்கு செச்சினிய போராளிக்குழுத் தலைவர் டோக்கு உமாரொவ் என்பவரினாலும், ஒடேசாவில் கடந்த மாதம் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட ருஸ்லான் மதாயெவ் என்பவரினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தொலைக்காட்சியில் தோன்றித் தெரிவித்தார். ஆடம் ஒஸ்மாயெவ் என்ற இரண்டாமவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து உலகில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.


விளாதிமிர் பூட்டின் நாள்தோறும் நடமாடும் மாஸ்கோவில் உள்ள குத்துசோவ்ஸ்க்கி வீதியில் குண்டு வெடிப்பை நடத்துவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.


ஒடேசாவில் குண்டுவெடிப்பு நடந்த வீடு ஒன்றில் வைத்து பியான்சின் கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் கொல்லப்பட்ட மதாயெவ் என்பவரும் தோக்கு உமாரொவின் கட்டலை ஒன்றிற்கு இணங்க ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துருக்கி வழியாக உக்ரைன் வந்தடைந்ததாக பியான்சின் தெரிவித்தார். ஒஸ்மாயெவ் என்ற இரண்டாமவர் நீண்ட காலம் இலண்டனில் வசித்தவர் என்றும் கூறப்படுகிறது.


2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை உருசியாவின் அரசுத்தலைவராக இரு தடவைகள் இருந்த பூட்டின் மூன்றாவது தடவையாக மார்ச் 4 ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்.


மூலம்[தொகு]