எகிப்திய அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகினார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 12, 2011

கடந்த 18 நாட்கள் இடம்பெற்று வந்த மக்கள் போராட்டங்களை அடுத்து எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தனது பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.


ஒசுனி முபாரக்

"நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இராணுவ உயர் மன்றம் நாட்டின் தலைமையைக் கவனிக்கும்," என எகிப்தியப் பிரதித் தலைவர் ஒமார் சுலைமான் தெரிவித்தார். நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை ஆகியன கலைக்கப்படும் என அல்-அராபியா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


முபாரக்கின் பதவி விலகலைக் குறித்து நோபல் விருதாளர் முகமது எல்பரதேய் குறிப்பிடுகையில், "இது எனது வாழ்நாளில் மிகப்பெரும் நாள். நாடு இப்போது விடுதலையாகி விட்டது," எனத் தெரிவித்துள்ளார். "எகிப்து இப்போது மக்களாட்சிக்கு செல்ல முயல வேண்டும்," என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


பதவி விலகிய முபாரக் தலைநகர் கெய்ரோவை விட்டுப் புறப்பட்டு விட்டதாகவும், தற்போது செங்கடல் பகுதியில் உள்ள அவரது சுற்றுலா மையத்தில் தங்கியுள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்து வந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]