ஐவரி கோஸ்டில் புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்படப் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 1, 2013

ஐவரி கோஸ்டின் வணிகத் தலைநகர் அபிஜான் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விளையாட்டரங்கம் ஒன்றில் வாண வேடிக்கைகளைக் கண்டு களித்து விட்டு வெளியேறும் போதே இந்த அனர்த்தம் நிகழ்துள்ளது. 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை.


இதற்கிடையில் உலகின் பல நகரங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டுக் வாண வேடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. முதற் தடவையாக பர்மாவிலும் இம்முறை வாண வேடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


உலகில் முதன் முதலில் 2013 புத்தாண்டைச் சந்தித்த நாடு நியூசிலாந்து ஆகும். நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரின் 328 மீட்டர் உயர வானளாவியில் ஜிஎம்டி நேரம் 11:00 மணிக்கு வாண வேடிக்கைகள் இடம்பெற்றன. இரண்டு மணி நேரம் கழித்து சிட்னி நகரம் புத்தாண்டைச் சந்தித்தது. 1.5 மில்லியன் மக்கள் சிட்னியின் துறைமுகப் பாலம், மற்றும் ஒப்பேரா மாளிகை ஆகிய இடங்களில் இடம்பெற்ற வாண வேடிக்கைகளைக் கண்டு களித்தனர்.


மூலம்[தொகு]