காசாவில் இசுரேலும், அமாசு இயக்கமும் போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு
- 17 பெப்ரவரி 2025: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
வியாழன், நவம்பர் 22, 2012
காசாக் கரையில் இசுரேலுக்கும் காசாப் பகுதியை ஆளும் இசுலாமிய அமாசு இயக்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு நேற்று எட்டப்பட்டது.
உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து காசாவில் நேற்று புதன்கிழமை இரவு பொதுமக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரித்து மகிழ்ந்தனர். காசாவில் இருந்து மூன்று ராக்கெட்டுகள் இசுரேலை நோக்கி ஏவப்பட்டதாக இசுரேலிய வானொலி தெரிவித்துள்ளது. ஆனாலும் இசுரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அது தெரிவித்தது.
எகிப்தின் மத்தியத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டை இரு தரப்பும் மதித்து நடக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்று வந்த மோதல்களில் குறைந்தது 150 பாலத்தீனர்களும், ஐந்து இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இசுரேலின் ஏவுகணைத் தாக்குதல்களில் பல கட்டடங்கள், மற்றும் வீடுகள் சேதமடைந்தன.
நாடுகடந்த நிலையில் வாழும் அமாசின் அரசியல் தலைவர் காலிது மெசால் கருத்துத் தெரிவிக்கையில், இசுரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது, அமாசின் முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். காசாவுக்கு வரும் பாதைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்றார் காலிது மெசால்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அமாசு இயக்கத்தினர் முதற்தடவையாக டெல் அவீவ், மற்றும் எருசலேம் நகர்களைத் தாக்கக் கூடிய நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
நேற்றைய தினம், டெல் அவீவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.
மூலம்
- Gaza crisis: Israel-Hamas ceasefire agreement holds, பிபிசி, நவம்பர் 22, 2012
- Gaza truce in effect after week of bloodshed, என்டிரிவி, நவம்பர் 22, 2012
