கிராமின் வங்கியில் இருந்து யூனுஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 4, 2011

வங்காளதேசத்தில் சிறுகடன்கள் வழங்குவதில் முன்னோடி நிறுவனமான கிராமின் வங்கியின் நிருவாக இயக்குநர் பொறுப்பில் இருந்து அவ்வங்கியின் நிறுவனர் பேராசிரியர் முகமது யூனுஸ் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நிதித்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கிராமின் வங்கி நிறுவனர் பேராசிரியர் முகமது யூனுஸ்

தனது பதவி நீக்கலுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள நோபல் பரிசு வென்றவரான முகமது யூனுஸ், தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதையிட்டுக் கவலைப்படவில்லை என்றும், ஆனால் தான் "உரிய முறையில்" பதவி விலகவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தான் நிறுவிய கிராமின் வங்கியின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


முகமது யூனுஸ் இளைப்பாறும் வயதை எட்டியும் பதவியில் இருப்பதாகவும், அத்தோடு அவர் முறையற்ற விதத்தில் பதவியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறி கடந்த புதன் அன்று வங்காளதேசத்தின் மத்திய வங்கி அவரைப் பணியில் இருந்து நீக்கியது. யூனுசிற்கு தற்போது 70 வயதாகிறது. வங்காளதேசத்தின் இளைப்பாறும் வயது 60 ஆகும்.


யூனுசின் பணி நீக்கலுக்கு எதிராக அவர் சமர்ப்பித்திருந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்.


2007 ஆம் ஆண்டில் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. பிரதமர் இராணுவ ஆட்சியின் போது வீட்டுக்காவலில் இருந்த போது யூனுஸ் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டார் என்பதில் ஹசீனாவுக்கும் யூனுசிற்கும் இடையில் பிரச்சனைகள் கிளம்பின.


பேராசிரியர் யூனுஸ் கிராமின் வங்கியைத் தனது சொந்தச் சொத்தாகப் பாவிக்கிறார் என்றும், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி அவர் பணம் கறக்கிறார் என்றும் கடந்த டிசம்பரில் ஷேக் ஹசீனா குற்றம் சாடியிருந்தார்.


வறிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும், அதன் நிறுவனர் யூனுசிற்கும் 2006ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]