கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக கலாநிதி கி.கோவிந்தராஜா நியமனம்

விக்கிசெய்தி இலிருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

செவ்வாய், பெப்பிரவரி 14, 2012

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எட்டாவது உபவேந்தராக முனைவர் கிட்ணன் கோவிந்தராஜா அவர்கள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


கணிதத் துறை முனைவர் பட்டம் பெற்ற இவர் 1993ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் வரையிலான காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


2010ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அசாதராண சூழ்நிலை காரணமாக அப்போதைய உபவேந்தராக இருந்த முனைவர் என். பத்மநாதன் பதவி விலகியிருந்தார். அதனை அடுத்து பதில் உபவேந்தராக கே. பி. பிரேம்குமார் செயற்பட்டு வருகிறார். கடந்த மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றுவதற்காக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்கா தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent authority) நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து அவரது நியமனம் உயர்கல்வி அமைச்சினால் இரத்துச் செய்யப்பட்டது.


கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு, பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறைப் பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன், கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடப் பீடாதிபதி எஸ்.சுதர்சன், மற்றும் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரமான புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மூலம்[தொகு]