குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 20, 2011

யூகோசுலாவியப் போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற ஆணையத்தினால் தேடப்பட்டு வந்த கடைசிப் போர்க்குற்றவாளி கொரான் காத்சிச் இன்று கைது செய்யப்பட்டதாக சேர்பியா அறிவித்துள்ளது.


கொரான் காத்சிச்

52 வயதான காத்சிச் 1991-1995 காலப்பகுதியில் குரோவாசியாவில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் குரோவாசிய சேர்பிய பிரிவினைவாதிகளுக்குத் தலைமை தாங்கினார்.


செர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான குரோவாசியர்கள் மற்றும் சேர்பியர்கள் அல்லாத சிறுபான்மையினரையும் படுகொலை செய்ததாக காத்சிச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


காத்சிச் கைது செய்யப்பட்டதை சேர்பிய அரசுத்தலைவர் போரிஸ் தாதிச் இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.


பெல்கிரேட் நகரின் வடக்கே புரூஸ்கா கோரா மலைப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் ஒளிந்திருப்பதாக பல நாட்களாக நம்பப்பட்டு வந்தது. ஏழாண்டுகளுக்கு முன்னர் இவர் தலைமறைவாகியிருந்தார்.


இன்னும் சில நாட்களில் இவர் மேலதிக விசாரணைகளுக்காக த ஹேக் நகருக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்சிச் கைது செய்யப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]