குவாண்டானாமோ சிறையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 16, 2009


கியூபாவின் தீவிலுள்ள குவாண்டானாமோ சிறைச்சாலையை மூடிவிட்டு வேறொரு இடத்தில் புதிய சிறைச்சாலையை அமைக்கும் யோசனையை அமெரிக்கா விரைவில் அறிவிக்கவுள்ளது.


குவாண்டானமோவிலுள்ள கைதிகள் சிலரை விடுதலை செய்த பின்னர் ஏனையோரை அமெரிக்காவின் இலினோயி மாநிலத்திலுள்ள தொம்சன் என்ற இடத்தில் சிறைவைக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இப்புதிய சிறைச்சாலை சிகாகோ நகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள மிசிசிப்பி நதியின் அருகாமையில் அமைக்கப்படவுள்ளது.


இங்கு பாவிக்கப்படாமலுள்ள அரச கட்டடமொன்று சிறைச்சாலையாக மாற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படவுள்ளது. தொம்சன் என்ற இடத்தில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை போதிய வசதிகளைக் கொண்டுள்ளதாக இலினோயி மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பான பேச்சுக்கள் அமெரிக்காவின் மத்திய அரசின் அதிகாரிகளுக்கும் மாநில அரசின் அதிகாரிகளுக்குமிடையே நடைபெறவுள்ளன. ஒபாமா பதவியேற்ற போது குவான்தனமோ சிறைச்சாலையை மூடப்போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்[தொகு]