கொழும்பில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டப் பேரணி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 4, 2010


இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த அரசுத்தலைவர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்ற எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.


எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டசுமார் 5,000 பேர் கோஷங்களை எழுப்பினார்கள்.


ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டிருந்தன.


முன்னராக, தேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த கூறியிருந்தார்.


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்குகள், இராணுவ உயரதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இக்குற்றச்சாட்டுக்களி மறுத்திருக்கின்றனர்.


அண்மைக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிகளில் இம்முறை மிகப்பெரும் தொகையானவர்கள் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

மூலம்