சர்ச்சைக்குரிய இண்டர்லொக் புதினம் மலேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 22, 2011

மலேசிய அரசு சர்ச்சைக்குரிய 'இண்டர்லொக்' பாடநூலில் உள்ள புதினத்தை மலாய் மொழி இலக்கியப் பிரிவுப் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொண்டுள்ளது. சென்ற வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய மனிதவள அமைச்சர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவித்தலை கல்வியமைச்சர் முகிதின் யாசின் விரைவில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.


"நாடறிந்த இலக்கியவாதி டத்தோ அப்துல்லா உசேனின் கைவண்ணத்தில் உருவான இண்டர்லோக் நாவல் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்வதோடு, அந்நாவல் குறித்த சர்ச்சைக்கு இத்துடன் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" எனத் தாம் பெரிதும் நம்புவதாக மலேசிய இந்தியக் காங்கிரசுத் துணைத்தலைவர் எஸ். சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.


'இண்டர்லொக்" என்ற இலக்கியப் பாடநூல் ஒன்றில் உள்ள புதினம் மலேசியத் தமிழரிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்தனர்.


மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் குறுநாவல் ஒன்று இந்நூலில் சேர்க்கப்பட்டது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இப்புதினம் அப்துல்லா உசேன் என்ற தேசிய எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புதினம் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மிகவும் தாமதமாக மீட்டுக்கொள்ளப்பட்டாலும், அரசாங்கத்தின் இம்முடிவு எழுத்தாளரின் கெளரவத்தை பாதுகாப்பதோடு, இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதாக பல அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.



தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]