சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 6, 2012

இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என உச்ச நீதி மன்றம் பரிந்துரைத்துள்ளது. திவிநெகும சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அவை முதல்வர் சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாசித்தார்.


உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் மேலும் சில விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 47 பிரிவுகளில் 16 இலங்கைக் குடியரசின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு முரணாக அமைந்திருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திவிநெகும சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், குறைந்த வருமானம் பெறும் 18 இலட்சம் பேரின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே திவிநெகுமவின் இலக்காகுமெனத் தெரிவித்தார்.


மூலம்[தொகு]