சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 28, 2010

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 13 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியில் உள்ள எஸ். திருச்செல்வம் என்ற வர்த்தகரின் மகனே கடத்தப்பட்டவர். இது தொடர்பாக கடந்த புதன்கிழமை 16 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற அந்த மாணவனுடன் பயிலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை எழுதியுள்ளது.


மாணவன் காணாமல் போனதன் பின்னர் இது தொடர்பில் கடந்த தினம் ஒன்றில் அரசியல் கட்சியொன்றின் தென்மாராட்சிப் பொறுப்பாளர் ஒருவர் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேவேளை அவருடைய வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சித்தரப்புகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கிடையில், “மாணவன் கபிலநாத்தின் படு கொலைக்கு மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும். கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்படவேண்டும். அதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கவேண்டும்”, என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா அறிக்கை விடுத்துள்ளார்.

மூலம்[தொகு]