சூடான் விமான விபத்தில் அமைச்சர் உட்பட 31 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 19, 2012

சூடானில் இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டதாக சூடான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


இராணுவத்தினர்,அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட 31 பேர் வரை சென்ற விமானம் நூபா மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.


புனித ரமழான் பெருநாள் நிறைவடைந்த ஈத் அல்-பிதுர் கொண்டாட்டத்திற்காக தலைநகர் கார்ட்டூம் இல் இருந்து தெற்கு கோர்டோஃபான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளானது. சூடான் அமைச்சர் காசி அல்-சாதிக் அப்துல் ரகீம், நீதிக் கட்சியின் தலைவர் மக்கி அலி பலாயில் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் முக்கிய புள்ளிகள் ஆவார். மேலும் இரண்டு அமைச்சர்கள் உயிரிழந்ததாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.


காலநிலை சீராக இல்லாததால் முதற் தடவை விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், இரண்டாம் தடவை தரையிறங்க முற்பட்ட போதே விமானம் மலையில் மோதி வெடித்துள்ளது.


எண்ணெய் வளம் மிக்க தெற்கு கோர்டோஃபான் பகுதி தெற்கு சூடானிய எல்லையில் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]