சேர்பியாவில் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 3, 2010

சேர்பியாவின் மத்திய பகுதியில் இன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


5.3 அளவு நிலநடுக்கம் தலைநகர் பெல்கிரேடிலிருந்து 150 கிமீ தென்மேற்கே கிரசேவோ நகருக்கு அருகே 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி இது இன்று அதிகாலை 0156 (0056 GMT) மணிக்கு இடம்பெற்றுள்ளது.


உள்ளூர் மருத்துவமனை உட்பட சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் பல வீடுகளுக்கு நீர், மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வீடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இருவர் கொல்லப்பட்டதாக செர்பியாவின் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


70,000 பேர் வசிக்கும் இந்நகரத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணியாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]