சோமாலியத் தீவிரவாதிகள் இரு இளம் பெண்களுக்கு பகிரங்க மரணதண்டனை நிறைவேற்றினர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 29, 2010

சோமாலியாவில் இரண்டு இளம் பெண்கள் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகளால் பகிரங்க மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பெலெட்வைன் என்ற நகரில் பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


பதின்ம வயதுப் பெண்கள் இருவரும் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.


மரணதண்டனைகுள்ளாக்கப்பட்ட பெண்கள் 15 வயதும் 18 வயதும் உடையவர்கள். இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவிருப்பதாகவும், அனைத்து மக்களும் இதனைக் காண வர வேண்டும் என அல்-சபாப் தீவிரவாதிகள் சிலர் நகரின் வீதிகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரும் இசுலாமின் எதிரிகள் என அவர்கள் கூறினர்.


இக்கொலைகளைப் பார்த்த பொது மக்கள் பலர் அதிர்ச்சியடைந்ததாக நேரில் கண்ட ஒரு பெண் தெரிவித்தார்.


1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் முறையான அரசு அமைக்கப்படவில்லை. அல்-கைடாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் இயக்கம் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.


மூலம்[தொகு]