நியூசிலாந்து சுரங்க வெடிப்பு: சிக்குண்ட 29 பேரும் இறந்து விட்டதாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 24, 2010

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்தை அடுத்து சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்ட 29 தொழிலாளர்களும் மீட்கப்பட முடியாத நிலையில் இன்று அங்கு இடம்பெற்ற இரண்டாவது பெரும் வெடிப்பை அடுத்து இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தெற்குத் தீவில் பைக் ஆற்றில் உள்ள இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று பிற்பகல் 1437 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது பெரும் வெடிப்பில் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என காவல்துறை உயர் அதிகாரி காரி நோல்சு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஒரு மாபெரும் தேசிய இழப்பாகும் என பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை வெடிப்பில் சிக்குண்டவர்களில் 24 நியூசிலாந்தர்களும், 2 ஆத்திரேலியர்களும், 2 பிரித்தானியரும், ஒரு தென்னாப்பிரிக்கரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 24 முதல் 62 வயதானவர்கள் ஆவர். வெள்ளிக்கிழமையில் இருந்து இவர்களுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.


இந்த அனர்த்தம் பல மட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது ஒரு பெரும் இழப்பு.

ஆனந்த் சத்தியானந்த், ஆளுநர்

சுரங்கத்தினுள் மெத்தேன் வாயுவின் அளவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தாமதமாகியியிருந்த நிலையில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்துள்ளது.


இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் மீட்டெடுக்கப்படும் என நிலக்கரிச் சுரங்கத்தின் பணிப்பாளர் பீட்டர் விட்டோல் தெரிவித்தார்.


இன்றைய அனர்த்தத்தைக் கோள்விப்பட்டவுடன் இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நிலத்தில் விழுந்து புரண்டதாக கிரே மாவட்ட முதல்வர் தெரிவித்தார்.


”இந்த அனர்த்தம் பல மட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது ஒரு பெரும் இழப்பு,” என நியூசிலாந்தின் ஆளுனர் ஆனந்த் சத்தியானந்த் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்தி[தொகு]


மூலம்[தொகு]