நைஜீரியப் பாடசாலையில் இசுலாமியப் போராளிகள் தாக்குதல், 30 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 6, 2013

நைஜீரியாவின் வடகிழக்கில் யோபி மாநிலத்தில் மமுடோ நகரில் பாடசாலை ஒன்றின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 29 மாணவர்கள், மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் எரிக்கப்பட்டதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


யோபி உட்பட மூன்று மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் அவசரகாலச் சட்டத்தை அந்நாட்டு அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு பெருமளவு படையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர்.


இறந்தவர்கள் பலரின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு கருகி உள்ளதால் அவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அடையாளம் காணச் சிரமப்படுகின்றனர்.


தீவிரவாதிகள் எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகளுடன் வந்து பாடசாலைக்குத் தீ மூட்டினர் என உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். மேலும் பலர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தனர்.


இப்பகுதியில் போக்கோ அராம் போராளிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 600 இற்கும் அதிகமானோர் இக்குழுவால் கொல்லப்பட்டுள்ளனர்.


இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நைஜீரியாவின் வடக்கே இசுலாமிய நாடொன்றை அமைப்பதே போக்கோ அராம் போராளிகளின் நோக்கம் ஆகும்.


மூலம்[தொகு]