நைஜீரியாவில் போராளிகளின் பிடியிலிருந்த 19 பேரை இராணுவத்தினர் விடுவித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 19, 2010

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்ட்டா பகுதியில் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 19 பேரை கடந்த புதன்கிழமையன்று இராணுவத்தினர் விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


விடுவிக்கப்பட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்கள், இரண்டு பிரெஞ்சுக் காரர்கள், இரண்டு ந்தோனேசியர்கள், மற்றும் ஒரு கனேடியரும் அடங்குவர். ஏனையோர் நைஜீரியர்கள்.


இவர்கள் அனைவரும் அணமைக் காலத்தில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளப் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டவர்கள் ஆவர்,


போராளிக் குழுவின் முன்னால் தலைவர் ஒருவரே இந்த நடவடிக்கையில் தமக்கு உதவியதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இந்நடவடிக்கையில் பணயக் கைதிகளில் எவரும் கொல்லப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.


"இது எமக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரும் வெற்றியாகும். முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்பு மற்றும் மன்னிப்புத் திட்டம் ஆகியவை எமக்கு இப்போது உதவுகிறது."


சென்ற ஆண்டு அரசினால் அறிவிக்கப்பட்ட மன்னிப்புத் திட்டத்தை அடுத்து பல போராளிகள் ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தனர். அவர்களுக்கு அரசுத்தலைவரின் பொது மன்னிப்பு, பணக்கொடுப்பனவு, தொழிற்பயிற்சி என்பன அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தாலும், மென்ட் அமைப்பினர் மீண்டும் ஆட்கடத்தல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எண்ணெய்ப் பகுதியில் உள்ள வளங்கள் அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தமது நாட்டு மக்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கனடா மற்றும் பிரான்ஸ் என்பன நைஜீரிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.


மூலம்[தொகு]