நைஜீரியாவில் முஸ்லிம் - கிறிஸ்தவர்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 19, 2010


நைஜீரியாவின் மத்தியில் ஞாயிறன்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இளைஞர் கும்பல்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டதையடுத்து அந்நகர வீதிகளில் இராணுவத் துருப்பினரும் கலவரக் கட்டுப்பாட்டுப் போலிசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இம்மோதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆனாலும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. வீடுகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றுக்கு தீவைக்கப்பட்டிருந்தன. இரவுநேர ஊரடங்கு உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறைந்தது மூவாயிரம் பேர் இந்த மோதல்கள் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. இவர்களில் பலர் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.


இப்பகுதியில் வரலாற்றுரீதியாக இன மற்றும் மத மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2008 ஆம் ஆண்டில் 200 பேரும் 2001 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் அதிகாமானோரும் இறந்துள்ளனர்.


ஞாயிறன்று இடம்பெற்ற வன்முறைக்கு காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றார் அரசு உயர் அதிகாரி டான் மான்ஜாங் தெரிவித்தார்.


அன்று இடம்பெற்ற ஒரு உதைப்பந்தாட்டப் போட்டி முடிவில் இக்கலவரம் வெடித்திருக்கலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.


"35 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேர் இராணுவ உடை அணிந்திருந்தார்கள்" என மான்ஜாங் தெரிவித்தார்.


இம்மாதிரியான கலவரங்களுக்கு காரணம் மதவாதம்தான் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், யதார்த்தத்தில் நில உரிமை தொடர்பான சொத்துத் தகராறும் பகைமையும்தான் இக்கலவரங்களின் அடிப்படைக் காரணம் என நைஜீரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

மூலம்