பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 14, 2011

ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலினால் குறைந்தது இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 122 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.


பெல்ஜியத்தின் லீஜ் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த புனித லாம்பர்ட் சதுக்கத்தில் இருந்த மக்கள் மீது, அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் கூரையிலிருந்து ஒருவர் பல கையெறிக் குண்டுகளை வீசியதாக இந்நிகழ்வை நேரில் பார்த்த ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


தாக்குதலை நடத்தியவர் நோர்டீன் அம்ரானி என்பவர் 33 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் என்றும் அந்த நபர் பின்னரை தன்னையும் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் தனியாகவே அதை செய்தார் என்றும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் அவர் குறித்த விபரங்களை சேகரித்து வைத்திருந்தனர் என்றும் லீஜ் நகரின் முதல்வர் கூறியுள்ளார்.


இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டெடுத்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்தனர். தலையின் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


மூலம்[தொகு]