மட்டக்களப்பு வாகரையில் தொல்பொருட்கள் மீட்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 8, 2010

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள காயான்கேணி என்ற காட்டுப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்குரிய கட்டிட இடிபாடுளும் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மக்கள் நடமாட்டமற்ற அக்காட்டுப் பகுதியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கிடைத்த தகவல்களின் பேரில் வாகரை பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி உட்பட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றிருந்த போதே இக்கட்டிட இடிபாடு எச்சங்களும், தொல் பொருள் ஆய்வுக்குரிய தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அந்தப் பகுதிக்கு தாம் சென்றிருந்த போது சட்ட விரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அல்லது புதையல் தோண்டிய அடையாளங்களையும் காண முடிந்ததாக வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.


1856 ம் ஆண்டு பிரித்தானிய ஆய்வாளர் ஒருவரால் எழுதப்பட்ட மட்டக்களப்பு தொடக்கம் சிலாபம் வரையிலான பயணக் கட்டுரையில்; இந்தப் பகுதியில் 'வன்னிச்சியார்'என்ற ராணி ஆண்ட அரண்மனை இருந்ததாக் குறிப்பிட்டிருக்கின்றார்.


என்றாலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆய்வாளர் அறிக்கை கிடைத்த பின்னரே இது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் வாகரைப் பிரதேச செயலாளர் கூறினார்.


இதனை அடுத்து கொழும்பில் இருந்து புதைபொருள் ஆராய்ச்சியாளர் நளீன் வீரதுங்க தலைமையிலான 20 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு சென்று ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் போது, 17ம் நூற்றாண்டுக்கு உரியவை என்று கருதப்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காலப்பகுதிக்குரிய கட்டிடங்கள், பாரிய மதில் சுவர்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]