முஜிபுர் ரகுமான் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 28, 2010


வங்காள தேசப் பிரதமரும் வங்கத் தந்தையுமான முஜிபுர் ரகுமானை 1975 ஆம் ஆண்டில் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஐவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


படிமம்:BDP.jpg

இராணுவப் புரட்சி ஒன்றில் சேக் முஜிபுர் ரகுமான், அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்மார் மேலும் அவர்களது குடும்பத்தவர்கள் 20 பேர் ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர். முஜிபூர் ரஹ்மானின் புதல்வியும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்ததால் உயிர் பிழைத்தனர்.


சில மணி நேரத்துக்கு முன்னதாகவே இவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தூக்கிலிடப்படுவார்கள் என வங்காளதேச சட்டத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனாலும் எந்த நேரத்திலும் அது நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இவர்கள் ஐவரும் டாக்கா சிறைச்சாலையில் புதன்கிழமையன்று தூக்கிலிடப்பட்டார்கள்.


ரகுமானின் கொலையில் தாம் சம்பந்தப்பட்டிருந்ததை ஐவரும் ஒத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் தம்மீதான விசாரணைகள் இராணுவ நீதிமன்றத்திலேயே நடத்தப்பட வேண்டும் என அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தார்கள். உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்திருந்தது.


1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் முஜிபூர் ரஹ்மான்.


இந்த இராணுவ புரட்சி மேற்கொண்டவர்கள் மீது 21 ஆண்டுகளுக்குப் பின், அதுவும் ஷேக் ஹசீனா பிரதமராகப் பொறுப்பேற்றதன் பிறகுதான் அதாவது 1996-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.


1975ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசு தடை விதித்தது. இதை பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஷேக் ஹசீனா ரத்து செய்தார்.


இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேர் தலைமறைவாக உள்ளனர். ஒருவர் சிம்பாப்வேயில் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 3 பேர் 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். சிறையில் உள்ள 5 பேர் மட்டும் மேல் முறையீட்டுக்காக விண்ணப்பித்தனர்.


சம்பவம் நடந்து ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்