வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 16, 2011

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.


அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர்வொன்றை வழங்கி, தமிழ் மக்கள் உள்ளடங்கும் அதிகார அலகு தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்று அது பரிந்துரைத்துள்ளது.


அதன் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு கணிசமான அதிகாரங்களுடன் கூடிய அதிகார அலகொன்று வழங்கப்படுவதுடன், அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை விட சர்வதேசத்தின் கண்காணிப்புக்குழுவொன்றுக்கு தலையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிபுணர் குழுவின் பரிந்துரையின் சாராம்சமாகும்.


அத்துடன் அங்கு அமையும் உருவாக்கப்படும் அதிகாரப் பிரிவு (மாகாண சபை அல்லது சமஷ்டி அரசாங்கம்) சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.


மூலம்[தொகு]