வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 3, 2011

ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்து மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வாகனத்திற்குக் கீழே பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.


25 அகவையுடைய ரோனன் கேர் என்பவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் வடக்கு அயர்லாந்துக் காவல்துறையில் பணியில் இணைந்தார். ஓமா என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனத்தின் இருக்கையில் அமர்ந்த போது வாகனம் வெடித்துச் சிதறியது. நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை ஆயினும், குடியரசுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் எனப் பரவலாக நம்பப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை அவர்கள் முன்னரும் பல தடவைகள் நடத்தியுள்ளனர்.


ஐ.ஆர்.ஏ இல் அரசியல் கட்சியான சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், "இத்தகைய தாக்குதல்களால் வடக்கு அயர்லாந்தில் அமைதி மற்றும் அரசியல் திட்டங்களுக்குப் பின்னடைவு வராமல் இருக்க தமது கட்சி உறுதி பூண்டுள்ளது," எனத் தெரிவித்தார்.


ஐ.ஆர்.ஏ. இன் தொடர்ச்சி என்ற இயக்கம் அமைதி உடன்பாட்டை எதிர்க்கும் குடியரசுக் குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் பொது மக்கள் மீதும் ஆயுதப் படையினர் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.


மூலம்[தொகு]