வன்னி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 5 ஆகக் குறைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 27, 2012

இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக உள்ள வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளை, இலங்கையின் தெற்கு மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.


ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்தந்த மாவட்டங்களின் வாக்காளர் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் தேர்தல் ஆணையாளரால் நிர்ணயிக்கப்படுகிறது.


வன்னி தேர்தல் மாவட்டம் மன்னார், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு தேதல் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 2011 ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் பதிவான வாக்காளரின் எண்ணிக்கை 221,409 ஆகும். இந்த எண்ணிக்கை 2010 இல் 236,449 ஆகவும், 2009 இல் 270,707 ஆகவும் இருந்தது.


பிபிலை, மொனராகலை, மற்றும் வெல்லவாயா தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டில் 319,557 வாக்காளர்கள் பதிவாகியன். இவ்வெண்ணிக்கை 2010 இல் 315,452 ஆகவும், 2009 இல் 308,230 ஆகவும் இருந்தன.


கடந்த ஆண்டு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டது. அதே வேளை மாத்தறை, குருணாகல், பதுளை, இரத்தினபுரி ஆகிய தேர்தல் மாவட்டங்கள் ஒவ்வென்றுக்கும் அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 816,005 ஆக இருந்தது. 2010 இல் இது 484,791 ஆகக் குறைந்திருந்தது.


மூலம்[தொகு]