வெளிநாட்டு இசுலாமிய அறவுரையாளர்கள் 161 பேரை இலங்கை வெளியேற்றுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 23, 2012

இலங்கையின் நுழையுரிமை விதிகளை மீறியமைக்காக வெளிநாட்டு முஸ்லிம் அறவுரையாளர்கள் 161 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் பணித்துள்ளனர்.


சுற்றுலா வீசா பெற்று வந்தவர்கள் பள்ளிவாசல்களில் அறவுரை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குடிவரவுத்துறை தலைவர் சுலானந்தா பெரேரா தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவ்வாறு அறவுரை வழங்குபவர்கள் இசுலாமின் மிதவாதமான கொள்கைகளை எடுத்துரைப்பதில்லை என உள்ளூர் முஸ்லிம்கள் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், மாலைதீவுகள், மற்றும் அரபு நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த அறவுரையாளர்கள் அனைவரும் இம்மாதம் 31ம் நாளுக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தப்லிகி ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வியக்கம் கிழக்காசியப் பிராந்தியத்தில் மிகவும் புகழ் பெற்றது.


இவர்களது வெளியேற்றம் குறித்த முடிவுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக இன்று உயர் அதிகாரிகளைச் சந்திக்க விருக்கிறார்கள்.


இலங்கையில், சிங்களவர்கள், தமிழர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களே அதிகளவில் உள்ளனர்.


மூலம்[தொகு]