ஹெக்லிக் எண்ணெய்ப் பிரதேசத்தில் இருந்து தமது படையினரை வெளியேற்ற தெற்கு சூடான் முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 20, 2012

சூடானின் எல்லைப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஹெக்லிக் எண்ணெய் வயல் பகுதியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் இன்று தமது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


சூடானிய அரசு ஹெக்லிக் நகரில் இருந்து தம் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டி தெற்கு சூடானியப் படைகள் சென்ற வாரம் ஹெக்லிக் பகுதியைக் கைப்பற்றினர். ஆனாலும், இந்த ஆக்கிரமிப்பு சட்ட விரோதமானது எனக் கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் டெஹ்ற்கு சூடானியப் படையினர் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், அத்துடன் தெற்கு சூடான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அவர் சூடானைக் கேட்டுக் கொண்டார்.


கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மூண்ட இப்பிரச்சினை ஒரு முழு அளவான போரைத் தோற்றுவிக்கும் அபாயம் உருவாகியிருந்தது.


தெற்கு சூடானின் இன்றைய அறிவித்தல் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வழிவகுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மூன்று நாட்களுக்குள் முழுப் படையினரும் திரும்பி விடுவர் என தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. ஹெக்லிக் தெற்கு சூடானின் பகுதி எனத் தாம் இப்போதும் நம்புவதாகவும், பன்னாடுகளின் ஒத்துழைப்புடன் நாம் இதற்கு ஒரு தீர்வைக் காணுவோம் என அரசுத்தலைவர் கூறினார். ஹெகிலிக் சூடானின் பகுதி என உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.


மூலம்[தொகு]

[[பகுப்பு:சூடான்]