மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 16, 2011

மேற்கு வங்காளத்தில் நச்சுச் சாராயம் அருந்தி 125 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ரிக்சா வண்டி இழுப்பவர்களும், சாலையில் கூலி விற்பனை செய்வோரும் ஆவர்.


175 பேர் வரையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகவும், இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மது குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது நச்சுச் சாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது. இதனை முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.


இதே வேளையில், மதுபானம் விற்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை வழங்கப்படும் என மம்தா அறிவித்துள்ளர்.


கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 91 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]