1982 படுகொலைகளுக்காக குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தளபதி கைது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 20, 2011

தென்னமெரிக்க நாடான குவாத்தமாலாவில் 1982-83 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற படுகொலைகளில் பங்கேற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் எக்டர் மரியோ லோப்பசு பியுன்ரெசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


81 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் குவாத்தமாலா நகரத்தின் வைத்துக் கைது செய்யப்பட்டார். எஃப்ரெயின் ரியோஸ் மொண்ட் என்பவரின் தலைமையில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலத்தில் இனப்படுகொலைகளிலும், வேறு பல குற்றங்களிலும் இவர் பங்கேற்றார் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.


1982 - 83 காலப்பகுதியில் நாட்டின் இக்சில் பகுதியில் முன்னூறுக்கும் அதிகமான பழங்குடி மாயா மக்கள் படுகொலையுடன் இவர் சம்பந்தப்பட்டுள்ளார் என குவாத்தமாலாவின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் 1995 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


36 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போரில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]