இலங்கைக்கான ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகை நிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 16, 2010

இலங்கைக்கான ஜிஎஸ்பி+ எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று ஞாயிற்றுக் கிழமை முதல் விலக்கிக் கொண்டது. இதனை அடுத்து இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியான தருணத்தை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.


இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறை நீண்டகாலமாக ஐரோப்பிய நாடுகளில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டதாக இருந்து வந்தது. ஜி.எஸ்.பி.பிளஸ் என்ற வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வந்தபோது உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களின் போதான போர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு மறுத்துவிட்டது.


ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான சலுகைகள் இலங்கைக்குக் கிடைத்து வந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவால் இலங்கைக்கு சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் பிபிசியிடம் கருத்து வெளியிட்டார்.


இந்த வரிச்சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால ஒரு லட்சம் பேர் வரையிலானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழக்க நேரிடக் கூடும் எனவும் அவர் கூறுகிறார். நாட்டின் பாரிய கைத்தொழிற்றுறையாக ஆடை ஏற்றுமதியே காணப்படுகிறது. இத்தொழிற்றுறையில் 10 இலட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். தலைநகர் கொழும்பைச் சூழ 250 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]