மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 14, 2011

இந்தியாவின் மும்பை நகரில் நேற்று இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மராட்டிய மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் இரண்டு குண்டுகள் நகரின் மத்திய பகுதியிலும் ஒன்று நகரின் தென் பகுதியிலும் வெடித்துள்ளன. இவை ஐ ஈ டி என்னும் வெடிபொருளை உள்ளடக்கிய குண்டுகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6:30 மணியளவில் 15-நிமிட இடைவெளிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. சக்தி வாய்ந்த குண்டு மும்பையின் தெற்கே ஒப்பேரா மாளிகை வணிகப் பகுதியில் இடம்பெற்றது.


இரண்டாவது குண்டு நகரின் தெற்கே சாவேரி சந்தைப் பகுதியிலும், மூன்றாவது குண்டு நகர மத்தியில் வெடித்துள்ளன. இக்குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. 2008 ஆம் ஆண்டில் மும்பையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரும் குண்டுவெடிப்புகள் ஆகும். 165 பேர் கொல்லப்பட்ட 2008 குண்டுவெடிப்புகளுக்கு பாக்கித்தானியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


பாக்கித்தான் அரசு, மற்றும் ஐக்கிய நாடுகள் நேற்றைய தாக்குதல்களுக்குத் தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.


மூலம்[தொகு]