பகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 21, 2012

உருசியாவில் இந்து மத நூலான பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த உருசிய நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கிற்கு எதிராக இந்தியா எங்கும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.


பகவத் கீதையின் பதிப்பு, தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், உருசியாவில் வேற்றுமைகளை விதைப்பதாகவும் கூறி அதனை உருசியாவில் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சைபீரியாவில் உள்ள தோம்ஸ்க் நகர நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் இவ்வழக்கை விசாரணை உருசிய நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்தது. தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.


ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரால் Bhagvad Gita As It Is என்ற நூல் வெளியிடப்பட்டது. பகவத் கீதையின் உரையிலேயே சில சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக உருசியாவின் வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது. இச்சர்ச்சைக்குரிய உரையை ஹரே கிருஷ்ணா இயத்தின் நிறுவனர் ஏ. சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் எழுதியிருந்தார்.


உருசியாவின் பழமைவாதக் கிறித்தவத் திருச்சபையினரே தமது இயக்கத்தினரின் சேவைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வழக்கைத் தாக்கல் செய்திருக்கின்றனர் என ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]