அமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் புயலின் கோரத் தாண்டவம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 3, 2013

ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா, அர்கன்சாசு மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய புயலுக்கு குறைந்தது பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சுழற்றி அடித்த புயல் பெரும் மழையைக் கொட்டியது. புயல் அமெரிக்காவின் கிழக்குக் கரையை நோக்கி நகர்கிறது. சுமார் நூறு பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். ஓக்லகோமா நகரில் புயலில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். அர்கன்சாசு மாநிலத்தில் மழைக்கு மூன்று பேர் உயிரிழந்தனர்.


வெள்ளிக்கிழமை இரவு வீசிய புயலில் விளம்பர பலகைகள் வளைந்து கொண்டன. மோட்டார் வாகனக்கள் தூக்கி எறியப்பட்டன. டிராக்டர் டிரெய்லர்களும் சாலைகளில் புரட்டிப் போடப்பட்டன. வேலையை விட்டு செல்வோரும், புயலுக்கு பயந்து வெளியேறியவர்களும் போக்குவரத்து நெருக்கடியை உச்சத்துக்கு கொண்டு சென்றனர். ஓக்லகோமா நகருக்கு வெளியே உருவான புயல் மக்களுக்கு போதுமான எச்சரிக்கை அவகாசத்தைக் கொடுத்தது. புகலிடத்தை தேடிக்கொள்ளுமாறு காவல்துறை கூறியதால் வெளியேறிய மக்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக புயல் வீசும் வேளையில் அதனிடம் மாட்டிக் கொண்டனர்.


தான் ஓட்டிச் சென்ற காரை புயல் உயரத் தூக்கி கீழேபோட்டது என்று ஆசிரியரின் உதவியாளர் டெர்ரி பிளாக் தெரிவித்தார். தனது வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு பின்னர் அவர் வருத்தப்பட்டார். வெள்ளியன்று ஏற்பட்ட புயலால் ஒக்லஹோமா மாநிலம் மட்டும் பாதிக்கப்படவில்லை. மிசூரி மாநிலத்தில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. செயிண்ட் சார்லஸ் கவுண்டியில் 71 வீடுகள் மோசமாக சேதம் அடைந்துள்ளன. சுமார் நூறு வீடுகள் சுமாராக பாதிக்கப்பட்டுள்ளன.


இரு வாரங்களுக்கு முன்னர் ஓக்லகோமா நகரில் வீசிய புயலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]