விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலைக் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை செய்யப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடம்

திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

புதன், செப்டெம்பர் 18, 2013

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், திருகோணமலையில் புலிகளின் கட்டளைத் தளபதியாக இருந்தவருமான சிவசுப்ரமணியம் வரதநாதன் (பதுமன்) நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இவர் 2009 ஏப்ரலில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று அவர் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போதே நீதிபதி அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்தார்.


திருகோணமலை கல்லூரி வீதியைச் சேர்ந்த பதுமன் 2001 யூலை 1 முதல் டிசம்பர் 31 வரை இலங்கை இராணுவத்தின் படைமுகாம்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக இவர் மீது 979 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


பதுமனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தரப்படவில்லை என்றும், அவரது வாக்குமூலங்கள் முன்னுக்குப் முரணாக உள்ளதாகவும் கூறி திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். அமல் ரணராஜா அவரை விடுதலை செய்தார்.


மூலம்[தொகு]