இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 17, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலில், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வென்றுள்ளது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள 540 இடங்களில் 281 இடங்களை பாஜக வென்று, தனிப்பெருங் கட்சியாக உள்ளது. இந்த அறுதிப் பெரும்பான்மை நிலையுடன், இக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


இந்தியாவில் புதிய நடுவண் அரசினை அமைத்திட, 272 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும். தனியொரு கட்சியாக இந்நிலையினை அடைய முடியவில்லையெனில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இயலும். ஆனால் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி 272 இடங்களுக்குமேல் தனக்கெனப் பெற்றுள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவின்றி தானாகவே ஆட்சி அமைக்கும்.


இந்த வெற்றியின் வாயிலாக, விடுதலை இந்தியாவின் அரசியல் வரலாற்றில் சில சாதனைகளை பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது:

  • 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்தியாவில் கட்சியொன்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆண்டுத் தேர்தல்களில் எந்தத் தனிக் கட்சியும் 272 எனும் எண்ணிக்கை இலக்கினை அடையவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சிகள் அமைக்கப்பட்டன.
  • இந்திய தேசிய காங்கிரசு அல்லாது, தனிப் பெரும்பான்மையினைப் பெற்ற இரண்டாவது கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.
  • இந்த வெற்றியே பாரதிய ஜனதா கட்சியின் இதுவரையிலான சிறந்த செயல்திறனாகும். இதற்கு முன்னதாக 1998, 1999 ஆண்டுத் தேர்தல்களில் அதிகபட்சமாக 182 இடங்களை வென்றிருந்தது.
  • இந்தத் தோல்வியே இந்திய தேசிய காங்கிரசின் மோசமான தோல்வியாகும். இதற்கு முன்னதாக 1999 ஆண்டுத் தேர்தலில் குறைந்தபட்சமாக 114 இடங்களை வென்றிருந்தது.


மூலம்[தொகு]