ஒட்டுக்கேட்டல் விவகாரம்: பிரித்தானிய காவல்துறைத் தலைவர் பதவி துறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 19, 2011

தொலைபேசி ஒட்டுக் கேட்ட விவகாரத்துடன் தொடர்புபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இங்கிலாந்தின் காவல்துறைத் தலைவர் சேர் போல் ஸ்டீவன்சன் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.


சேர் போல் ஸ்டீவன்சன்

பிரபலயங்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட சர்ச்சையை தொடர்ந்து கடந்த வாரம் நிறுத்தப்பட்ட 163 ஆண்டு காலப் பழமையான 'நியூஸ் ஒப் த வேர்ல்ட்' பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர் நெயில் வில்லியம்சுடன், ஸ்டீவன்சன் நெருங்கிப் பழகியுள்ளார். 'நியூஸ் ஒப் த வேர்ல்ட்' பத்திரிகையளர் நீல் வாலிஸ் தனது தனிப்பட்ட ஆலோசகர் என ஸ்டீவன்சன் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் நீல் வாலிஸ் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன் நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்துள்ளனர். அத்துடன் 'நியூஸ் ஒப் தி வேர்ல்ட்' பத்திரிகையின் அதிபர் ரூப்பர்ட் மெர்டொக்கின் இரவு விருந்துகளுக்கு ஸ்டீவன்சன் அடிக்கடி பங்கேற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மூடப்பட்ட, 'நியூஸ் ஒப் த வேர்ல்ட்' பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு, பலரது பதவிகளையும் காவு வாங்கி வருகிறது. இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 57 வயதான போல் ஸ்டீவன்சன் தனது பதவியை நேற்று முன்தினம் பதவி துறந்தார். எனினும் தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரத்துடன் தனக்கு தொடர்பில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]