அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய சூறாவளிக்கு 305 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 29, 2011

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் வீசிய கடும் சூறாவளிக்கு இதுவரை 305 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


2011 ஏப்ரல் 26-28 இல் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கில் காலநிலை மாற்றம்

அலபாமா, ஆர்கன்சா, ஜார்ஜியா, இலினாய், கென்டக்கி, மிசிசிப்பி, மிசூரி, ஓக்லகோமா மாநிலப் பகுதிகள் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன. அலபாமாவில் மட்டும் 204 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், 1,700 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றும், நாளையும் இப்பகுதிகளில் கடுமையான புயல்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அமெரிக்க வானிலை மைய நிலையம் அறிவித்துள்ளது.


கடந்த 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட கடும் சூறாவளிக்கு 310 பேர் இறந்தனர். அதன் பிறகு தற்போது தான் மோசமான சூறாவளி வீசியுள்ளது. இதனால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூறாவளியில் சிக்கி அலபாமா ஆளுநரின் சொந்த ஊரான டஸ்கலூசா முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. அதனால் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் 300க்கும் அதிகமான சூறாவளிகள் இப்பகுதிகளை தாக்கியுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 130 சூறாவளிகள் வீசியுள்ளன.


மூலம்[தொகு]