உருசியாவின் இங்குசேத்தியா குடியரசில் தற்கொலைத் தாக்குதல், 7 காவல்துறையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 20, 2012

உருசியாவின் இங்குசேத்தியா குடியரசில் காவல்துறையினர் ஒருவரின் நல்லடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டு, 15 பேர் காயமடைந்ததாக வடக்கு கவ்க்காசுப் பிராந்திய அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இங்குசேத்தியா குடியரசு

கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகளுடனான சண்டையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட காவல்துறையினர் ஒருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற போது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தம்மை வெடிக்க வைத்துள்ளார். இங்குசேத்தியாவின் வடமேற்கே மால்கோபெக் மாவட்டத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இத்தாக்குதலில் இறந்தவர்களில் தற்கொலைக் குண்டுதாரி தவிர்த்து ஏனையோர் அனைவரும் காவல்துறையினர் ஆவர்.


தற்கொலை மனிதனின் தலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.


வடக்கு கவ்க்காசு பிராந்தியத்தின் செச்சினியா குடியரசில் போராளிகளுடனான போர் பத்தாண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் அண்டை மாநிலங்களான கபார்தினோ-பல்க்காரியா, இங்கிசேத்தியா, தாகெத்தான், வடக்கு ஒசேத்தியா ஆகிய குடியரசுகளில் இசுலாமியப் போராளிகளுடனான போரில் உருசியப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மூலம்[தொகு]