ஐவரி கோஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது நகரையும் கைப்பற்றினர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 8, 2011

ஐவரி கோஸ்டின் (கோர்ட் டி’வார்) சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் லோரெண்ட் குபாக்போவின் ஆதரவு படைகளிடம் இருந்து நாட்டின் மேற்கில் உள்ள மூன்றாவது நகரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. அந்நகரை மீண்டும் கைப்பற்றுவதற்கு மேலும் துருப்புகள் அங்கு கொண்டு செல்லப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.


கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அலசானி ஓட்டாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், குபாக்போ தனது பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். இதனை அடுத்து அங்கு இரு அணியினருக்கும் இடையே கடும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.


சென்ற வாரம் இரண்டு சிறிய நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று டொலேப்புலு என்ற மூன்றாவது நகரையும் கைப்பற்றியுள்ளனர்.


கொக்கோ ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ஐவரி கோஸ்ட்டில் உள்நாட்டுப் போர் உருவாகும் ஆபத்து உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், நாட்டின் கொக்கோ ஏற்றுமதி மற்றும் உற்பத்தி முழுவதையும் அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசுத்தலைவர் குபாக்போ உத்தரவிட்டுள்ளார். கொக்கோ உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு அனைத்தயும் இனிமேல் அரசே மேற்கொள்ளும் என அரசுத் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது.


உலகத் தேவைக்கென 40 விழுக்காடு கொக்கோ ஐவரி கோஸ்டில் இருந்தே ஏற்றுமதியாகிறது. இதுவரை காலமும் இதன் கட்டுப்பாடு முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் வசம் இருந்து வந்தன.


குபாக்போவுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக கொக்கோ ஏற்றுமதிக்கு தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் என ஓட்டாரா பல்தேசியக் கம்பனிகளுக்கு விடுத்திருந்தார். 475,345 தொன்கள் கொக்கோ ஏற்றுமதிக்காக அவரி கோஸ்ட் துறைமுகங்களில் தேன்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏறத்தாழ 300,000 ஐவரியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள லைபீரியாவுக்குச் சென்றுள்ளனர்.


மூலம்[தொகு]