கொழும்பில் பள்ளிவாசல் மீது பௌத்த கும்பல் தாக்குதல், 12 பேர் காயம்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
ஞாயிறு, ஆகத்து 11, 2013
இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாலத்துறையில் சுவர்ண சைத்திய வீதியில் அமைந்துள்ள ‘மஸ்ஜிதுல் தீனுல் இசுலாம்’ என்ற பள்ளிவாசல் மீது நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெருமளவு சிறப்பு அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். நேற்று இரவு பாலத்துறை பொலிஸ் பகுதியில் 10 மணிக்கு அமுலுக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நூற்றுக்கும் அதிகமான பௌத்த மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று பொல்லுகள், இரும்புக் கம்பிகள், வாள்கள், தடிகளுடன் அவ்விடத்துக்கு வந்து தாக்குதல் நடத்தினர். கல்வீச்சு மேற்கொண்டதில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
கல்வீச்சுத் தாக்குதலினால் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. காயமடைந்தவர்களில் இருவர் காவல்துறையினர் எனக் கூறப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வு தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாகவே இது தொடர்பில் இழுபறி நிலைமை நிலவுவதாகவும், இங்கு அமைக்கப்பட்ட பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோருவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடொன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரும் கூறிவந்தனர்.
பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அண்மைக்காலமாக பல தாக்குதல்கள் நடந்துவருவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.
மூலம்
[தொகு]- Sri Lanka Buddhist mob attacks Colombo mosque, பிபிசி, ஆகத்து 10, 2013
- Buddhist mob attacks Sri Lankan mosque, 12 injured, ராய்ட்டர்ஸ், ஆகத்து 10, 2013
