சிறீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினர் பலர் கைது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 27, 2011

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத் தலைநகர் சிறீநகரில் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று குடியரசு நாளன்று தேசியக் கொடியை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது கட்சித் தொண்டர்கள் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மூத்த பாஜக துணைத் தலைவர் சோபி யூசுப்பும் ஒருவர்.


குடியரசு நாளன்று சிறீநகரின் லால்சவுக் பகுதியில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பாரதீய ஜனதா கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் அதை நடுவண் அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இணைந்து முறியடித்து விட்டன. சிறீநகர் எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தடை போடப்பட்டது. இந்நிலையில் நேற்றுப் பிற்பகலில் லால்சவுக்கை நோக்கி தேசியக் கொடியுடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


பா.ஜ.க. தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, அனந்த்குமார் உள்ளிட்டோர் கடந்த திங்களன்று விமானம் மூலம் ஜம்மு சென்றடைந்தபோது, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். புதனன்று குடியரசு தின நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாஜகவினர் கொடியேற்றவிடாமல் தடுக்கப்பட்டது குறித்து அரசு மீது பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.


மூலம்[தொகு]