சோமாலியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 21, 2011

சோமாலியத் தலைநகர் மொகடிசுவில் காவல்துறையினரின் பயிற்சி முகாம் ஒன்றில் தற்கொலைக் கார்க்குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஆறு காவல்துறையினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியின் அருகே உள்ள டார்விஷ் முகாமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 0830 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இத்தாக்குதலை யார் நடத்தியது என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அல்-சபாப் போராளிகள் பல தாக்குதல்களை முன்னர் நடத்தியிருக்கின்றனர்.


"எம்மை நோக்கி ஒரு வாகனம் வேகமாக வந்து வெடித்தது. அப்பகுதி எங்கும் ஒரே புகை மண்டலமாகக் காணப்பட்டது," என காவல்துறை அதிகாரி அசன் அலி ராய்ட்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


தெற்கு சோமாலியாவில் பல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அல்-சபாப் போராளிகள் கடந்த சில மாதங்களாக இடைக்கால அரசுப் படைகளுடன் மொகதிசுவைக் கைப்பற்றுவதற்காக மோதி வருகின்றனர். சோமாலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தரமான தேசிய அரசு ஒன்று இருக்கவில்லை.


மூலம்[தொகு]