நோர்வேயில் இரட்டைத் தாக்குதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 23, 2011

நோர்வேயில் நேற்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஒசுலோவில் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், தலைநகருக்கு வெளியே ஆளும் தொழிற்கட்சி இளைஞர் அமைப்பின் முகாம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒசுலோவில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் 3:20 மணிக்கு வெடித்த முதல் குண்டினால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். யுட்டேயா என்ற தீவு ஒன்றில் இடம்பெற்ற இளைஞர் முகாம் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டனர்.


துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது நோர்வேஜியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இளைஞர் முகாமில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஒசுலோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கும் இவருக்குத் தொடர்பிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். காவல்துறையினரைப் போன்று சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நோர்வே ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.


இத்தாக்குதல்களை நோர்வே பிரதமர் ஜென்சு ஸ்டோல்டென்பர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார். "எமது நாடு சிறியது, எம்மைக் கொன்று எமது உணர்வுகளை அழிக்க முடியாது," என அவர் தெரிவித்துள்ளார்.


தீவு முகாமில் பலரைக் காணவில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிக்காத வெடிபொருட்கள் பல அங்கு கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.


இத்தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் இதுவரையில் உரிமை கோரவில்லை. தலைநகர் ஒசுலோவில் குண்டுவெடிப்பினார் பல அரசுக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. எரிந்து கொண்டிருக்கும் சில கட்டடங்களில் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர்.


வெள்ளிக்கிழமை நோர்வேயில் பொது விடுமுறையானதால் மேலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசுப் பேச்சாளர் கிறிஸ்டியான் அமுண்ட்சன் தெரிவித்தார்.


மூலம்[தொகு]