மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு கிராமி விருது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 24, 2011

அண்மையில் மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு மறைவிற்குப் பின்னரான கிராமி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ரெக்கார்டிங் அகாடமி வெளியிட்டுள்ளது.


ஸ்டீவ் ஜாப்ஸ்

ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தனது 56 வது அகவையில் புற்றுநோயால் மரணம் அடைந்தார். கணினித் தொழில்நுட்பத் துறையை புரட்சிகரமாக மாற்றி அமைத்த இவர், 2010 இல் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் பெறுமதி (350 பில்லியன்) மிக்க நிறுவனமாக வளர்த்தெடுத்தார். இதனால் இவர் உலகில் மிகவும் பணமும், செல்வாக்கும் மிக்கவர்களில் ஒருவர் ஆனார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.


ஸ்டீவ் ஜாப்ஸ் தனது உயரிய கணணிக் கண்டுபிடிப்புகளான ஐபாட், ஐடியூன் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அதற்காக அவருக்கு இந்த கிராமி விருது வழங்கப்படுகிறது.


இதற்கான சிறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 12ந் தேதி நடைபெறவுள்ளது. இசை உலகில் சாதனை படைத்து மரணம் அடைந்தவர்களை கௌரவிக்க வழங்கப்படும் விருதான “மறைவிற்குப் பின்னரான கிராமி விருது” ஸ்டீவ் ஜாப்சுக்கு வழங்கப்படுகிறது. இவர் தவிர கிலின் காம்பெல், ஆல்மன் பிரதர்ஸ் பாண்ட், ஜார்ஜ் ஜோன்ஸ், டயனா ஆகியோருக்கும் வாழ்நான் சாதனையாளர் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் முகமாக உருவச் சிலையொன்று அங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அறிவியல் பூங்கா ஒன்றிலேயே இச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை 6.5 அடி உயரம்கொண்டதுடன் அங்கேரிய நாட்டு சிற்பி ஹேர்னோ டொத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]