முன்னாள் உருசிய உளவாளியை மாஸ்கோ இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 27, 2011

கடந்த ஆண்டு சூன் மாதத்தில் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 10 பேர் அடங்கீய உருசிய ஒற்றர்களை அமெரிக்க அரசுக்குக் காட்டிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உருசிய உளவாளி ஒருவரை மாஸ்கோவின் மாவட்ட இராணுவ நீதிமன்றம் ஒன்று குற்றவாளியாகக் கண்டுள்ளது.


அலெக்சாண்டர் பொத்தேயெவ் என்பவரே காட்டிக் கொடுத்த குற்றச்சாட்டுக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் என நேற்று மொஸ்கோ நீதிமன்றம் அறிவித்தது. 10 உருசியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு முன்னதாக பொத்தேயெவும் அவரது குடும்பமும் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர். ஆனாலும், பொத்தேயெவ் இல்லாத நிலையிலேயே அவர் மீதான வழக்கு விசாரணை மாஸ்கோ நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இவருக்கு குறைந்தது 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்குமாறு வழக்குத் தொடுநர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஊடகத் துறையில் புகழ் பெற்ற ஆன்னா சாப்மேன் உட்பட 10 உருசியர்கள் அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு சூன் மாதத்தில் உளவு பார்த்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து உருசியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் படி, பிரித்தானியாவுக்கும் சிஐஏ இற்கும் உளவு பார்த்ததாக உருசியாவில் கைது செய்யப்பட்ட நான்கு வெளி நாட்டவர்களை உருசிய அரசு விடுவித்ததை அடுத்து அந்தப் பத்துப் பேரும் விடுவிக்கப்பட்டு உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]