பெரு அரசுத்தலைவர் தேர்தலில் தேசியவாத வேட்பாளர் உமாலா வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 7, 2011

தென்னமெரிக்க நாடான பெருவில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தேசியவாதியும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஒலாண்டா உமாலா வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒலாண்டா உமாலா

வலதுசாரி வேட்பாளர் கெய்க்கோ ஃபுஜிமோரி தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்னப்பட்ட நிலையில் உமாலா மூன்று வீத வாக்குகள் அதிகப்படியாகப் பெற்றுள்ளார். 48 வயதான உமாலா 51.6% வாக்குகளும், செல்வி ஃபுஜிமீரி 48.4% வாக்குகளும் பெற்றனர்.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தலைநகர் லீமாவில் பங்குச்சந்தைக் குறியீடு 10 விழுக்காடு குறைந்தது. நாட்டின் கனிமவள அதிகரிப்பில் கிடைக்குமிலாபம் முழுவதும் பெருவின் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என தேர்தலில் வெற்றி பெற்ற திரு. ஒலாண்டா உமாலா கூறினார்.


கெய்க்கோ ஃபுஜிமோரி முன்னாள் அரசுத்தலவரும் தற்போது சிறையில் உள்ளவருமான அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் மகள் ஆவார். 1982 இல் இராணுவத்தில் இணைந்த உமாலா 2000 ஆம் ஆண்டில் அல்பேர்ட்டொ ஃபுஜிமோரியின் ஆட்சிக்கெதிராகக் கிளம்பிய இராணுவக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தார். 2006 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.


தற்போது அரசு தலைவராக உள்ள அலன் கார்சியா இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.


மூலம்[தொகு]