கத்தீன் படுகொலைகளுக்கு ஸ்டாலினே காரணம் என உருசிய நாடாளுமன்றம் குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 27, 2010

இரண்டாம் உலகப் போரின் போது கத்தீன் என்ற இடத்தில் போலந்து மக்களின் படுகொலைகளுக்கு அப்போதைய சோவியத் அரசுத்தலைவர் w:ஜோசப் ஸ்டாலின்ஜோசப் ஸ்டாலினே காரணம் என டூமா எனப்படும் உருசியாவின் கீழவை (நாடாளுமன்றம்) குற்றம் சாட்டியுள்ளது.


கத்தீன் படுகொலை நினைவுச் சின்னம்
உருசியப் பொதுவுடமைவாதிகள் பலர் ஸ்டாலினை ஒரு தலைவராகவே காண்கின்றனர்

1940 ஆம் ஆண்டில் கத்தீன் படுகொலைகளுக்கு கட்டளையிட்டவர்கள் சோவியத் சர்வாதிகாரியும் சோவியத் அதிகாரிகளுமே என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.


போலந்துக்கு உருசியத் தலைவரின் அதிகாரபூர்வப் பயணம் இடம்பெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் இவ்வறிக்கை வெளியிடப்பட்டதை போலந்து வரவேற்றுள்ளது.


உருசிய நாடாளுமன்றத்தில் பலத்த விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. பொதுவுடமைவாதிகள் இதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உருசியக் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிர்த்து வாகளித்தது.


இப்படுகொலைகளுக்கு நாசி செருமனியரே காரணம் என சோவியத் ஒன்றியம் அப்போது பரப்புரை செய்து வந்தது. ஆனாலும், சோவியத் அரசின் கடைசிக் காலங்களில் 1990 ஆம் ஆண்டில் அப்போதைய மிக்கைல் கர்பச்சோவின் அரசு இப்படுகொலைகளுக்கு தமது நாடே காரணம் எனக் கூறியது. அன்றில் இருந்து உருசியாவுக்கும் போலந்திற்கும் இடையே இவ்விடயம் குறித்து மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது.


போலந்துடன் சனநாயக வழியில் புதிய உறவுகளுக்கான மேடை திறந்து வைக்கப்பட்டுள்ளது என உருசிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.


கத்தீன் படுகொலைகள் குறித்து எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருந்த அனைவரும் இறந்து விட்டார்கள் என உருசியா கூறி வருகிறது.


2005 ஆம் ஆண்டின் உருசிய விசாரணைகள் கத்தீன் சம்பவத்தில் 1803 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும் 22,000 போலந்து மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8,000 பேர் இராணுவத்தினர் ஆவர்.


கத்தீன் படுகொலைகளின் போது பல்லாயிரக்கணக்கான சோவியத் மக்களும் படுகொலை செய்யப்பட்டதாக உருசிய டூமா தெரிவித்துள்ளது.


இப்படுகொலைகளின் 70 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற ஏப்ரல் மாதம் அங்கு சென்ற போலந்து அரசுத்தலைவர் பயணம் செய்த விமானம் உருசியாவில் வீழ்ந்து நொறுங்கியதில் அரசுத்தலைவர் உட்பட போலந்தின் அரசு உயர் அதிகாரிகள் 90 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]