பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பறிப்பு மேன்முறையீடு தள்ளுபடி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 26, 2011

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள செய்த மேன்முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.


கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் ஒன்று இவரது பதவியைப் பறித்ததும் அல்லாமல் அவரின் குடியுரிமையையும் பறித்தது. இதனை எதிர்த்து பொன்சேக்கா உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இத்தீர்ப்பை அடுத்து தனது பதவி, குடியுரிமை மட்டும் அல்லாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வாக்குரிமையையும் இழப்பார்.


பொன்சேக்காவை விசாரிக்கவென அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமானது என பொன்சேக்காவின் வழக்கறிஞர்கள் விவாதித்தனர். இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்பவே அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


பொன்சேக்கா தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததை அடுத்து இலங்கைத் தேர்தல் சட்ட விதிப்படி அவருக்குப் பதிலாக அவரது கட்சியில் இருந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு பதவிக்குத் தெரிவு செய்யப்படாத அடுத்த நிலையில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்படுவார்.


கடந்த ஏப்ரல் 2010 இல் இடம்பெற்ற தேர்தலில் பொன்சேகா கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் பதிவாகி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]